“கற்பின் கொழுந்தே”

07/07/2020 4:19 PM | Anonymous

“கற்பின் கொழுந்தே”
=================


அன்பே அமுதே என்றிருந்தேன்; எனை
அரை நொடியில் நீ மறந்துசென்றாய்

பொன்னே கொடியே என்று சொன்னாய்; பின்
பொல்லா  துயரில் தவிக்கவிட்டாய்

காதல் கண்மணி நானிருக்க ; நீ
காமம்  தேடி அலைந்துசென்றாய்

காதலி கண்களை கலங்கவிட்டு ; நீ
மாதவி மடியில் மயங்கிருந்தாய்

பாதை தொலைந்து பரிதவித்தேன் ; உன்
பார்வை என்மேல் படவில்லை

பொன்னும் பொருளும் தொலைந்தபின்னே;உன்
கண்ணகி கண்ணில் தென்படுதா ??

காலில் சிலம்பை கண்டதுமே ; உன்
கடமை உணர்ச்சி பொங்கிடுதா ??

கற்பின் கொழுந்தே என்று சொல்லி ; என்
கண்களை நீயும் மறைப்பாயோ ??

கண்ட துயரை நான் மறந்து ; உன்
காலில்  வந்து வீழ்வேனோ ??

கணவன் உனக்கோ கற்பில்லை ; பின்
கண்ணகி நானுனை ஏற்பேனா ??

பாவம் என்றுன்னை மன்னித்தால் ; நாளை
பாடுபடும் இப்பெண்ணினமே

கற்பிற்கரசி பெயர் வேண்டாம்
கடற்கரைசாலை சிலை வேண்டாம்
கண்ணகி பிரிந்தே வாழ்ந்திடுவாள்
தண்டனை  இதுவே உனக்காகும்......


---செல்வ பெருமாள்


Muthamizh Sangam of Central Florida, Inc.  |  1156 Hollow Pine Dr, Oviedo, FL 32765   | contact us at mscf.ec@gmail.com

A registered, non-profit 501(c)(3) organization. Your contributions may be tax deductible. MSCF's Tax ID is 59-3327604.

Powered by Wild Apricot Membership Software